ஓமந்தை சோதனைச்சாவடி மூடப்பட்டுள்ளமை தொடர்பான ஊடக அறிக்கை
இலங்கையில் நடைபெற்ற கொடூரயுத்தம் 2009ம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், மக்களின் நாளாந்த வாழ்கையில் இராணுவத்தலையீடு பெரும் பாதிப்பை செலுத்தியது. அதனடிப்படையில், வடக்கு – கிழக்கு இணைப்பு பாலமாக உள்ள A9 வீதியின் ஓமந்தை சோதனைச்சாவடி யுத்தத்தின் பின்பும் ஒரு அசாதாரண தொனியினை புலப்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தற்போது இந்த சோதனை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளமையினை அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு (AFRIEL) வரவேற்கின்றது.
கடந்த காலத்தில் ஓமந்தை சோதனைச்சாவடியினை அகற்றுவதற்காக எமது அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை பாரிய சவாலுக்கு மத்தியில் முன்னெடுத்து வந்துள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று வெளியிடப்பட்ட இளைஞர் பிரகடனத்தில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. “சுதந்திரபயணம் – 2014” எனும் நிகழ்வில் இப்பிரகடனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி. வி. விகனேஸ்வரன் அவர்களிடம் இவ்பிரகடன அறிக்கை கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இச்சோதனை நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளமையினை AFRIEL அமைப்பு வரவேற்பதோடு, தொடர்ந்து வரும் காலப்பகுதியிலும் இது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுடன், அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு அப்பிரதேச மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட வேண்டும் என்பதையும் எமது வேண்டுகோளாக இவ் அரசாங்கத்திடம் முன்வைக்கின்றோம். இராணுவமுகாம் அமைந்துள்ள அப்பிரதேசம் தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடமாக இருந்தமையும், தற்போதும் அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி வாழ்வாதாரங்கள் இன்றி உறவினர்கள் வீடுகளில் வசிக்கின்றனர். அக்காணி மீண்டும் அம்மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான வேண்டு கோளினையும் இங்கு பதிவு செய்கின்றோம்.
வடக்கு – தெற்கு பற்றிய நல்லிணக்க செயற்பாட்டிலும் சுதந்திரமான சுமூக நிலையை பேணுவதிலும் இவ்வாறான செயற்பாடுகள் அவசியமானதே, ஓமந்தை சாவடியில் ஆரம்பிக்கப்பட்ட இவ் சாதகமான விடயம் வடக்கில் உள்ள ஏனைய காவலரண்கள், இராணுவ முகாம்கள் நீக்கப்படும் செயற்பாடுவரை தொடர வேண்டும் என்ற பாரிய எதிர்பார்ப்பு எம்மிடம் உள்ளது. வடக்கு சமூகத்தின் பாதுகாப்பு, சுதந்திரமான சிவில் சமூக செயற்பாடுகள் போன்றவற்றிற்காக குரல் கொடுத்து வரும் நாம், தொடர்ந்தும் இப்பிரச்சினைகள் பற்றி கண்காணித்து வருகின்றோம். வடக்கில் இராணுவத்தினால் கையகபடுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பு, மக்களின் சுதந்திர செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படல், இளைஞர்களுடைய பிரச்சினைகள் என்பவற்றிற்கு தீர்வு காண்பதோடு எமது மக்களின் நீண்ட கால வலிகளுக்கு நிவாரணம் தேடும் முயற்சியில் முக்கிய அம்சமான அரசியல் தீர்வுக்கும் சாதகமான பதிலை முன்வைக்க வேண்டும் என்பதை வடக்கில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் அங்கத்துவத்தினை பிரதிநிதித்துவப்படுத்தம் எமது AFRIEL அமைப்பு இங்கு உறுதியுடன் வலியுறுத்துகின்றது.
